மூடு

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

சட்ட மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தனது தொகுதிக்குத் தேவைப்படும் முக்கியப் பணிகளை செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிறப்பு அம்சங்கள்

இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதிகளில் தேவைப்படும் பணியினைக் கண்டறிந்து அப்பணியினை செயல்படுத்திட பரிந்துரைப்பார் ஊரக மற்றும் நகர்ப் புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு

சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை ரூ.200.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2017-18ஆம் ஆண்டு முதல் ரூ.250.00 இலட்சமாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத நிதி

மொத்த ஒதுக்கீடான ரூ.250.00 இலட்சத்தில் ரூ.150.000 இலட்சம் வரையறுக்கப்பட்ட நிதியாகவும், அத்தொகையில் அரசால் குறிப்பிடப்பட்ட முன்னுரிமை பணிகளை மட்டும் செய்யப்படவேண்டும். மீதமுள்ள ரூ.100.000 இலட்சம் வரையறுக்கப்படாத நிதியாகவும் அத்தொகையில் சட்டமன்ற உறுப்பினர் தனது விருப்பப்படி சட்டமன்ற உறுப்பினர் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை தேர்வு செய்யலாம்.

மேற்கொள்ளப்படும் பணிகள் (ஊரகப் பகுதிகளில்)

வரையறுக்கப்பட்ட நிதியான ரூ.150.000 இலட்சத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணிகளை தேர்வு செய்யலாம்.

சூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் நிறுவுதல், சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் தார்ச் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்), சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் அமைத்தல்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல்.

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல், பாலங்கள் கட்டுதல், கிராம ஊராட்சிகளில் இடுகாடு / சுடுகாடு வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக இடுகாடு, சுடுகாடுகள் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் புதிய வீடுகள் கட்டுதல்.

மேற்கொள்ளப்படும் பணிகள் (நகர்ப்புறப் பகுதிகளில்)

சூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் நிறுவுதல், சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் தார்ச் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்), சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் அமைத்தல்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல்.

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்.

பாலங்கள் கட்டுதல், இடுகாடு/சுடுகாடு வசதிகளை ஏற்படுத்துதல், தேவையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரிட் நடைபாதைகள் அமைத்தல், புதிய பொது பூங்காக்கள் அமைத்தல், பொதுக் கழிப்பிடங்கள் கட்டுதல், ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் விசையால் இயக்கப்படுகின்ற தூர்வாரும் இயந்திரங்கள் வாங்குதல்.